50 people arrested for struggle to close sterile plant
தூத்துக்குடி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 50 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, தூத்துக்குடி இந்திய உணவுக்கழக கிடங்கு ரௌண்டானாவில் இருந்து ஊர்வலமாக ஸ்டெர்லைட் ஆலை முன்பு சென்று முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று காலையில் இந்திய உணவுக்கழக கிடங்கு ரௌண்டானா அருகே திரண்டனர். அங்கு அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை செயலாளர் ரெஜிஸ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முத்து, பொருளாளர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநகர செயலாளர் ராஜா, புவிராஜ், சங்கரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாவட்டக்குழு ராஜா, கண்ணன், பாலமுருகன், உமாசங்கர், கொம்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பிறகு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
அப்போது, காவலாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் 50 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
