5 students who caught copy in Trichy first day of the examination
திருச்சி
தேர்வு தொடங்கிய முதல் நாளே திருச்சியில் காப்பி அடித்த ஐந்து மாணவர்கள் பிடிபட்டனர். அவர்கள் ஐவரும் தேர்வு அறையை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் 35 ஆயிரத்து 430 மாணவ, மாணவிகள் இந்த தேர்வினை நேற்று எழுதினர்.
இவர்கள் தேர்வு எழுதுவதற்காக மாவட்டம் முழுவதும் 112 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் முதன்மை கண்காணிப்பாளர்கள், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இது தவிர பறக்கும் படையினரும் 250 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
நேற்று தமிழ் முதல் தாள் தேர்வை மாணவ, மாணவிகள் எழுதினர். ஒவ்வொரு தேர்வு மையத்திலும் காவல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு கூடத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்கள் கொண்டு வரப்பட்டன.
லால்குடி கல்வி மாவட்டத்தில் ஒரு மாணவர், முசிறி கல்வி மாவட்டத்தில் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதிய 4 மாணவர்கள் என மொத்தம் 5 பேர் ‘காப்பி’ அடித்ததாக பிடிபட்டனர். அவர்கள் உடனடியாக தேர்வு மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
தேர்வு தொடங்கிய முதல்நாளே திருச்சி மாவட்டத்தில் 5 மாணவர்கள் காப்பி அடித்ததாக பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
