தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 5 சவரன் சங்கிலி பறிப்பு; தலையை சுவற்றில் அடித்ததால் பெண் மூர்ச்சை...
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை தாக்கி, தலையை சுவற்றில் அடித்து 5 சவரன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுவிட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தை அடுத்த நாடழகானந்தல் கூட்ரோட்டில் இட்லி கடை வைத்திருப்பவர் கண்ணன். இவரது மனைவி சகுந்தலா (58).
இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்புற கதவை திறந்து வைத்துவிட்டு வாசல்படியில் தலையை வைத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவு 12 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த சகுந்தலாவின் கழுத்தில் அணிருந்திருந்த 5 சவரன் சங்கிலியை மர்ம நபர்கள் பறிக்க முயன்றனர். இதனால் சட்டென்று எழுந்த சகுந்தலா சுதாரித்துக் கொண்டு தாலி சங்கிலியை கையால் இறுக்கமாக பிடித்துக் கொண்டார்.
மர்ம நபர்கள், நகையை பறிக்க முடியாததால் ஆத்திரமடைந்து சகுந்தலாவின் தலையைப் பிடித்து சுவரில் அடித்து தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர். இதில் சகுந்தலா மயக்கம் அடைந்தார்.
அதிகாலை 2 மணியளவில் சகுந்தலா கண்விழித்த பின்னர், சத்தம் போட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்தபோது சகுந்தலா இரத்த வெள்ளத்தில் இருந்தார்.
உடனே அவரை மீட்டு 108 அவசர ஊர்தி மூலம் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வேட்டவலம் காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.