சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில், மின்சார ரயில் தடம் புரண்ட விவகாரம் தொடர்பாக 5 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில், மின்சார ரயில் தடம் புரண்ட விவகாரம் தொடர்பாக 5 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை பணிமனையில் இருந்து சென்னை பீச் கடற்கரை ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் ஒன்று பயணிகள் இன்றி காலியாக சென்றுக் கொண்டிருந்தது. ஒன்றாம் நடைமேடையில் வந்து கொண்டிருந்த அந்த மின்சார ரயில் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதன் காரணமாக அந்த மின்சார ரயில் ஒன்றாம் நடைமேடையின் மீது ஏறி அங்குள்ள கட்டுமானம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து விபத்துக்குள்ளான மின்சார ரெயிலை நடைமேடையில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.

கூடுதல் உதவிக்காக 2வது நடைமேடைக்கு நவீன எந்திரங்கள் கொண்ட ரெயில் பெட்டியும் உடனடியாக வரவழைக்கப்பட்டது. மேலும் ரெயில்வே என்ஜினீயரிங் மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, விபத்துக்குள்ளான 2 பெட்டிகளில் இருந்து மற்ற 10 பெட்டிகளுக்கும் உள்ள இணைப்பை நவீன வெல்டிங் எந்திரம் மூலம் ஊழியர்கள் தனியாக பிரித்தனர். விபத்துக்குள்ளான இரயிலானது சுமார் 9 மணிநேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. இதன் பின்னர் சுமார் 15 மணி நேரத்திற்கு பிறகு முதலாவது நடைமேடையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடற்கரை இரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார இரயில்கள் முதலாம் நடைமேடையில் சுமார் 100 மீட்டருக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டு பொதுமக்களை ஏற்றி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான விவகாரம் தொடர்பாக ஐந்து பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு அதிகாரி பிரேம்குமார் தலைமையில், 5 பேர்கள் கொண்ட குழு அமைப்க்கப்பட்டுள்ளது. இதில், மெக்கானிக்கல், சிக்னல், ஆப்பரேட்டிங் மற்றும் எலக்ட்ரிகல் துறை அதிகாரிகள் இடம் பெறுவார்கள். இந்த விசாரணை குழு, ரயில் ஓட்டுநர் பவித்ரனிடம் விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை சென்னை கோட்ட ரயில்வே மேலாளரிடம் ஒப்படைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
