பெரம்பலூர் மாவட்டத்தில், ரேசன் கடைகளில், குடும்ப அட்டையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ அரிசி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “தேசிய உணவுபாதுகாப்பு சட்டம் 2013 இன்று முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ரேசன் கடைகளில் குடும்ப அட்டையில் பெயர் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா 5 கிலோ அரிசி விலையில்லாமல் வழங்கப்படும். இதுவரை 2 நபர்கள் முதல் 4 நபர்கள் வரை உறுப்பினர்களாக உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் விலையில்லா அரிசியின் அளவில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
ஐந்து நபர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் குடும்ப அட்டையில் உறுப்பினர்களாக இருக்கும் பட்சத்தில் ஒரு நபருக்கு தலா 5 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்படும்.
பெரம்பலூர் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 1 இலட்சத்து 74 ஆயிரத்து 404 குடும்ப அட்டைகள் உள்ளன.
இதில் 2,567 குடும்ப அட்டைதாரர்கள் விலையில்லா அரிசி பெறாத அட்டைதாரர்கள். மீதமுள்ள 1 இலட்சத்து 71 ஆயிரத்து 837 குடும்ப அட்டைகளின் பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவர்.
எனவே, பொதுமக்கள் இனிவரும் காலங்களில் ரேசன் கடைகளில் தங்களது உரிம அளவிலான விலையில்லா அரிசி உள்பட பொருட்கள் பெற்று பயனடையலாம்” என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தார்.
