கன்னியாகுமரியில் 5 மணி நேரம் விடாது கொட்டித் தீர்த்த கனமழையால் நாகர்கோவில் நகர சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.
கன்னியாகுமரியில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கிற்று. இரண்டு நாள்களுக்கு முன்பு வரை தூறல் மழையாகத்தான் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை அன்று முழுவதும் கருமேகக் கூட்டங்களுடன் வானம் மையிருட்டாக காட்சியளித்தது.
அணைப் பகுதிகளில் குறிப்பிடும் படியாக மழை பெய்யவில்லை. இதனால், அணைகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்த அணைகளின் நீர்மட்டமும் குறைந்தது.
இதில், நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் மிக மோசம். மைனஸ் அளவிற்கு சென்றுவிட்டது நீர்மட்டம். எனவே இந்த அணை நாளுக்கு நாள் வறண்டு கொண்டிருக்கிறது.
நாகர்கோவில் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று காலையில் இருந்தே வானம் கருமேகங்கள் சூழ்ந்து எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்ற நிலையிலேயே இருந்தது. ஆனால், மதியம் வரை மழை பெய்த பாடிலில்லை.
சுமார் 3.30 மணிக்குப் பிறகு திடீரென மழை பெய்தது. இந்த மழை திங்கள்கிழமை மாலை வரை நாகர்கோவில் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் நீடித்தது.
சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து பெய்த இந்த மழையினால் நாகர்கோவில் நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று திரும்பிய மாணவ – மாணவிகளில் சிலர் மழையில் நனைந்து நடந்து சென்றனர்.
இதேபோல் குலசேகரத்திலும் பகல் 3½ மணியளவில் இடி–மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால், சாலைகளில் வெள்ளம் போல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும், கன்னியாகுமரி, கொட்டாரம், அகதீசுவரம், ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், தோவாளை, பூதப்பாண்டி, திட்டுவிளை, இறச்சகுளம், தெரிசனங்கோப்பு, திடல், தடிக்காரன்கோணம், அருமநல்லூர், ஞாலம், திற்பரப்பு, பொன்மனை, பேச்சிப்பாறை, களியல், மார்த்தாண்டம், குளச்சல், கொல்லங்கோடு, நித்திரவிளை, ஆற்றூர் உள்பட மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
இதில் கன்னியாகுமரியில் மதியம் 1.30 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை மாலை 6 மணி வரை நீடித்தது.
இதனால் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலாப்பயணிகள் விடுதிகளில் முடங்கிக் கிடந்தனர். ஆனால், அவர்களும் இந்த மழையே வரவேற்றனர்.
திங்கள்கிழமை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 152 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 26 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது. காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் எந்தப் பகுதியிலும் மழை பதிவாகவில்லை.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு குமரி மாவட்டத்தில் மழையின் வேகம் சற்று அதிகமாக இருந்ததால். விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.
