போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த 5 ஆட்டோக்கள், 30 மோட்டார் பைக்குகள் பறிமுதல்; காவலாளர்கள் அதிரடி…
தருமபுரி
தருமபுரி நகரில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டு இருந்த ஐந்து ஆட்டோக்கள், 30 மோட்டார் பைக்குகள் போக்குவரத்து காவலாளர்கள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
தருமபுரி நகரில், நேதாஜி புறவழிச்சாலை, நான்கு முனைச் சாலைச் சந்திப்பு, நகரப் பேருந்து நிலையம், புறநகரப் பேருந்து நிலையம், சித்த வீரப்பச்செட்டித்தெரு, கந்தசாமி வாத்தியார் தெரு மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் போக்குவரத்து காவலாளர்கள் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் நேற்று திடிரென சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன், அருணாசலம், நகராட்சி சுகாதார ஆய்வாளர் கோவிந்தன் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.
இந்தச் சோதனையின்போது, அரசு மருத்துவமனை நுழைவு வாசலில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டு இருந்த ஐந்து ஆட்டோக்கள் மற்றும் நகரத்தின் முக்கியச் சாலைகளில் நிறுத்தப்பட்டு இருந்த 30 இருசக்கர வாகனங்களை அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு சுமார் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டன.