தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் வீட்டை முற்றுகையிட முயன்ற 49 பேர் கைது...
தேனி
தேனியில் உள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை முற்றுகையிட முயன்ற ஆதிதமிழர் பேரவையினர் 49 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
ஆதிதமிழர் பேரவை சார்பில், தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலப் பொதுச் செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இதில், "வன்கொடுமை சட்டத்தை செயல் இழக்கச் செய்யும் மத்திய அரசை கண்டிக்காத அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், தமிழக அரசைக் கண்டித்து, பெரியகுளத்தில் உள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை முற்றுகையிட போவதாக அறிவித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், ஆதித்தமிழர் பேரவையினர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
அப்போது, காவலாளர்களுக்கும், ஆதி தமிழர் பேரவையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வீட்டை முற்றுகையிட முயன்ற 49 பேரை காவலாளர்கள் கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி இரண்டு திருமண மண்டபங்களில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.