திண்டுக்கல்லில் எச்.ராஜாவின் உருவபொம்மையை எரித்த தி.மு.க.வினர் 40 பேர் கைது...
திண்டுக்கல்
கருணாநிதியை அவதூறாக பேசிய எச்.ராஜாவை கண்டித்து திண்டுக்கல்லில் அவரது உருவபொம்மையை எரித்த தி.மு.க.வினர் 40 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, தனது டிவிட்டர் பக்கத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவருடைய மகள் கனிமொழி ஆகியோரை பற்றி அவதூறாக பதிவிட்டதால் நேற்று பல்வேறு இடங்களில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதன்படி, திண்டுக்கல் மாவட்ட பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது,. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட அவைத்தலைவர் பசீர் அகமது தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது எச்.ராஜாவை கண்டித்தும், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், அவருடைய உருவபொம்மையும் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இதனையடுத்து எச்.ராஜாவின் உருவபொம்மையை எரித்த தி.மு.க.வினர் 40 பேரை நகர் வடக்கு காவலாளர்கள் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.