ரூ.40 கோடி பழைய நோட்டுக்கள் பறிமுதல் விவகாரம் : தண்டபாணியை குடையப் போகுது வருமான வரித்துறை
சென்னை கோடம்பாக்கத்தில் பாஜக பிரமுகர் தண்டபாணியிடம் பறிமுதல் செய்யப்பட்ட 40 கோடி ரூபாய் பழைய நோட்டுகள் குறித்த வழக்கு வருமானவரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே பாஜக பிரமுகர் தண்டபாணி என்பவருக்கு சொந்தமான துணிக்கடை உள்ளது. இங்கு காவல்துறையை சேர்ந்தவர்களுக்கான சீருடைகள் தயாரித்து கொடுப்பது வழக்கம்.
இந்நிலையில் இந்த கடையில் 40 கோடி மதிப்புடைய பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கோடம்பாக்கம் போலீசார் அந்த கடையில் சோதனை நடத்தியபோது கட்டுகட்டாக கிட்டத்தட்ட 40 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டது.
கடையின் உரிமையாளரும், பாஜக பிரமுகருமான தண்டபாணியிடம் கோடம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். யாரிடமிருந்து பணத்தை வாங்கினார், சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்தாரா ? பணத்தை மாற்றிக் கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருந்தாரா என பல கோணங்களில் விசாரணை நடைபெற்றது.
இதையடுத்து தண்டபாணியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்துமே வருமான வரித்துறையிடம் ஒப்படைப்பட்டது. மேலும் இந்த வழக்கும் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இன்று நண்பகல் 12 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் தண்டபாணியிடம் தங்களது விசாரணையைத் தொடங்குகின்றனர்.