டெங்கு காய்ச்சலால் இதுவரை 4 போலீஸ்காரர்கள் மருத்துவமனையில் அனுமதி...
சென்னையில், டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் ஏற்கனவே 3 போலீசார் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த எண்ணிக்கை 4 என உயர்ந்துள்ளது. இதனால், போலீசாருக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது; சென்னையிலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், டெங்கு அறிகுறியால் காவல்துறையில் வேலை பார்க்கும் சிபு (35), பார்த்திபன் (27), சக்திவேல் (33) ஆகியோர்அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஆயுதப்படை போலீஸ்காரர் யோகராஜ் (30) என்பவர் நேற்று மாலை சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள போலீசாரின் எண்ணிக்கை 4 என உயர்ந்துள்ளது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 4 பேருககும், டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
டெங்கு காய்ச்சல் அதிகரித்து வேகமாக பரவி வருவதால், சென்னையில், போலீசார் அனைவருக்கும், நிலவேம்பு கஷாயம் வினியோகிக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில், ஆயுதப்படை போலீசாருக்கு, திருவல்லிக்கேணி துணை கமிஷனர், பிரவேஷ்குமார் தலைமையில், நிலவேம்பு கஷாயம் வினியோகம் நடந்தது.