4 mlas ready to back amma group

4 எம்எல்ஏக்கள் திரும்பி வர ரெடியாக இருக்காங்க…ஓபிஎஸ் அணிக்கு ஷாக் கொடுத்த ராஜன் செல்லப்பா…

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதிமுகவின் இரு அணிகள் இணைப்புக்காக அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழு தேவையில்லை என்றும் அதிமுக அம்மா அணி சார்பிலான குழுவைக் கலைக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அம்மா அணியின் மதுரை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.கே.போஸ் பி.பெரியபுள்ளான் பா.நீதிபதி மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.தமிழரசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைத்து ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்பதற்காக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு குழு அமைக்கப்பட்டது என்றும். நீண்டநாள்களாகப் பேச்சு நடத்தி வந்தபோதும், பிரிந்து சென்றவர்கள் வர மறுக்கின்றனர் கூட்டத்தில் ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.

இருதரப்பிலும் பேச்சுவார்த்தைக்கான குழு அமைத்துள்ள நிலையில், 
கட்சி குறித்தும், ஆட்சியைப் பற்றியும் தவறான விமர்சனங்களை பிரிந்து சென்ற அணியில் இருப்பவர்கள் தொடர்ந்து கூறி வருவதாக குற்றம்சாட்டினார்.

பல பொய்யான குற்றச்சாட்டுகளை அந்த அணியினர் தெரிவிக்கும் நிலையில், பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்ட காரணத்தால் எதிர்க் கருத்துக்களைக் கூறாமல் அமைதியாக இருந்து வருகிறோம் என தெரிவித்த ராஜன் செல்லப்பா, பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், அக் குழுவைக் கலைத்துவிடலாம் என அறிவுறுத்தினார்.

இதுகுறித்து கட்சியின் தலைமை நிலையச் செயலரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு கடிதம் அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதிமுக அரசு தனிப் பெரும்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது. எந்தவொரு முடிவையும் தமிழக முதலமைச்சரால் சுயமாக எடுக்க முடியும். இதனால் பிரிந்து சென்றவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என தெரிவித்தார்.

தற்போது ஓபிஎஸ் அணியில் இருப்பவர்களில் 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீண்டும் திரும்பி வரத் தயாராக உள்ளதாக தெரிவித்த ராஜன் செல்லப்பா, இணைப்புக்கான பேச்சுவார்த்தைக் குழுவைக் கலைத்துவிடலாம் என்றும் யோசனை தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, கட்சியின் கொறடா உத்தரவை மீறிச் செயல்பட்ட எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராஜன் செல்லப்பா வலியுறுத்தினார்.