தாம்பரத்தில் மூன்றாவது ரயில் முனையம்… இன்று முதல் ரயில் சோதனை இயக்கம்!!
தாம்பரம் ரெயில் நிலையத்தில் 3வது முனையம் அமைக்கும் பணிகள் முடிவுற்ற நிலையில் சோதனை அடிப்படையில் ரெயில்கள் தற்போது அங்கு இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ஆகிய 2 ரெயில் முனையங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், தாம்பரத்தில் 3 வது ரெயில் முனையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்து விட்டது.
இதனையடுத்து, தாம்பரத்தில் அமையவிருக்கும் 3வது ரெயில் முனையம் எப்போது திறக்கப்படும் என பொதுமக்கள் ஆர்வமாக இருந்துவந்த நிலையில், தற்போது அங்கு சோதனை முயற்சியாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தாம்பரத்தில் 3வது முனையம் அமையும் பட்சத்தில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் தாம்பரத்தில் இருந்து புறப்பட வாய்ப்பு இருப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனைதொடர்ந்து, சோதனை அடிப்படையில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு செல்லும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் மற்றும் திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரெயில்கள், இன்றும், நாளை மறுநாளும் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.