சென்னை கடற்கரை சாலையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் 4வது நாளாக இன்றும் பொது ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று முன்தினம் போன்றே நேற்றும் பொது மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர். பலர் குழந்தைகளையும் அழைத்து கொண்டு குடும்பங்களாக வந்திருந்தனர்.
காலையிலேயே அதிகளவு கூட்டம் வந்ததால் அவர்களை காவல்துறையினர் கட்டுப்படுத்தி, அனைவரையும் வரிசையாக அனுப்பினர். மேலும், அதிமுக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் உள்பட பலரும் மொட்டை போட்டு தங்களது விசுவாசத்தை வெளிப்படுத்தினர்.
பல பெண்கள் கதறி அழுது கண்ணீர் விட்ட காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது. ஜெயலலிதா நினைவிடத்தில் கற்பூரம், ஊதுபத்தி ஏற்றி வழிபட்டனர்.
பொது மக்கள் அதிகம் கூடியதால் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன. அதிமுக சார்பில் மக்களுக்கு உணவுப் பொட்டலங்களும், குடிநீர் பாட்டில்களும் வழங்கப்பட்டன.
4வது நாளாக இன்று பொது காலை முதல் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். அவர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி அஞ்சலி செலுத்துகின்றனர்.
எம்ஜிஆர் நினைவிடத்துக்கு அருகே ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா நினைவிடத்தை தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
