3rd day of ban for bathing in hogenakkal protection for people
தருமபுரி
ஒகேனக்கல்லில் பரவலாக மழை பெய்து வருவதால் மக்களின் பாதுகாப்பு கருதி குளிக்கவும், பரிசல் இயக்கவும் இன்றும் 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
அணைகளின் பாதுகாப்பு கருதி அதிகளவில் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. அதன்படி, கபினி அணையில் இருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.
இந்தத் தண்ணீர் கர்நாடக - தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக நேற்று முன்தினம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. நேற்று முன்தினம் கணக்குப்படி 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டோடியது.
ஆனால், நேற்று ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. நேற்று காலை 9 மணி நிலவரப்படி விநாடிக்கு 23 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. அது மேலும் குறைந்து மாலை 5 மணி நிலவரப்படி விநாடிக்கு 18 ஆயிரம் கன அடியானது.
காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து 18 ஆயிரம் கன அடியாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இந்த தடை நேற்று 2-வது நாளாக நீடித்தது. இந்த நிலையில் ஒகேனக்கல்லில் பரவலாக மழை பெய்து வருவதால் மக்களின் பாதுகாப்பு கருதி குளிக்கவும், பரிசல் இயக்கவும் இன்று 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரதான அருவி, சினி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஆனால், குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படாததால் டல் அடிக்கிறது.
