சோகம்: நள்ளிரவில் இடி தாக்கியதில் 35 செம்மறி ஆடுகள் பரிதாபமாக பலி…
திண்டுக்கல்
திண்டுக்கல்லில், நள்ளிரவில் இடி தாக்கியதில் 35 செம்மறி ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அடுத்துள்ள காசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் கௌண்டர் மகன் பாலசுப்பிரமணி (40).
அதேப் பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான தோட்டத்தில் கிடை அமைத்து 35 செம்மறி ஆடுகளை பாலசுப்பிரமணி என்பவர் பராமரித்து வந்தார்.
இந்த நிலையில், வேடசந்தூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வந்தது. அப்போது பாலசுப்பிரமணியின் தோட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஆட்டுக் கிடையில் பலமாக இடி விழுந்ததாம்.
ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம்போல் கிடைக்குச் சென்ற பாலசுப்பிரமணி, அங்கு 35 ஆடுகளும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
சனிக்கிழமை இரவு தாக்கிய இடியின் காரணமாக 35 ஆடுகளும் பரிதாபமாக உயிரிழந்தது என்று அவர் தெரிவித்தார்.
மேலும், இதுகுறித்து கல்வார்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்திற்கும், கூம்பூர் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தார். அதன்பேரில் வருவாய்த்துறை அலுவலர்கள் நிகழ்விடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினர்.
இடி தாக்கியதில் 35 செம்மறியாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ள அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.