30 கிலோ கடமான் இறைச்சி வைத்திருந்த தந்தை, மகன் கைது; சமைக்க முயன்றபோது வசமாக சிக்கினர்...
நீலகிரி
நீலகிரியில் 30 கிலோ கடமான் இறைச்சியை வீட்டில் சமைக்க முயன்றபோது சோதனை நடத்தவந்த வனத்துறையினரிடம் தந்தை மற்றும் மகன் சிக்கினர். இறைச்சியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா தேவாலா வாழவயல் பகுதியில் கடமான் இறைச்சி பதுக்கி வைக்கப்பட்டு உள்ளது என்ற ரகசிய தகவல் வனத்துறைக்கு கிடைத்தது.
அந்த தகவலின்பேரில் வனச்சரகர் சரவணன், வன காப்பாளர்கள் லூயிஷ், மில்டன் பிரபு உள்ளிட்ட வனத்துறையினர் வாழவயல் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு விசாரணனி நடத்தினர்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ் என்பவரது வீட்டுக்குள் சென்று சோதனை நடத்தி 30 கிலோ கடமான் இறைச்சி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தகவல் உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக கூலித் தொழிலாளி புஷ்பராஜ் (56), அவரது மகன் பேரழகன் (26) ஆகிய இருவரை பிடித்து வனத்துறையினர் தேவாலா வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டுவந்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் டேன்டீ ரேஞ்ச் எண்.1 பகுதியில் செந்நாய்கள் தாக்கி கடமான் இறந்து கிடந்ததாகவும், அதனை இறைச்சிக்காக வெட்டி வீட்டுக்கு எடுத்துச் சென்றதாகவும் பிடிபட்ட புஷ்பராஜ், பேரழகன் ஆகியோர் வனத்துறையிடம் தெரிவித்தனர்.
பின்னர், அவர்களிடம் இருந்து கடமான் இறைச்சியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தேவாலா வனத்துறையினர் வழக்குப்பதிந்து புஷ்பராஜ், பேரழகன் ஆகியோரை கைது செய்தனர்.
வனத்துறையினர் இதுகுறித்து, "செந்நாய்கள் கடித்துக் கொன்றது பெண் கடமான். அதன் உடலை எடுத்துச் சென்று துண்டு துண்டாக வெட்டிவிட்டதால் அதன் வயது விவரம் தெரியவில்லை. இதன் இறைச்சியை சமைக்க முயன்ற நேரத்தில் எங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் தந்தை, மகன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தனர்.