கழிவறை வாளித் தண்ணீரில் விழுந்து குழந்தை பலியான சோகம்!
திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டியில் வீட்டின் கழிவறையில் இருந்த வாளித் தண்ணீரில் விழுந்து குழந்தை ஒன்று பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டியைச் சேர்ந்தவர் வடிவேலு. இவரது மனைவி மகாலட்சுமி. இத் தம்பதிக்கு தருண் என்ற மூன்று வயதுக் குழந்தையும், ஒரு மாத கைக்குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் புதன் கிழமை இன்று காலை, கைக்குழந்தையைக் குளிப்பாட்டுவதற்காக, கழிவறையில் உள்ள வாளியை எடுத்து அதில் நீர் நிரப்பிவிட்டு வந்துள்ளார் மகாலட்சுமி. அப்போது எதிர்பாராத விதமாக தருண் அந்தத் தண்ணீரில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. வாளித் தண்ணீரில் மூழ்கிய தருணை உடனே அங்கிருந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கே தருணை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை தருண் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து இந்தச் சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரண மேற்கொண்டனர்.
வாளித் தண்ணீரில் மூழ்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.