செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 3 டன் சேலம் மாம்பழங்கள் பறிமுதல் - உணவுபாதுகாப்பு துறை அதிரடி...
சேலம்
சேலத்தில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 3 டன் மாம்பழங்கள், வாழைப் பழங்களை பறிமுதல் செய்தனர் உணவுப் பாதுகாப்புத் துறையினர்.
சேலம் மாவட்டம், சின்னக்கடை வீதியில் 100-க்கும் மேற்பட்ட பழக்கிடங்குகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கிடங்குகளில் இருந்து வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு பழங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இதனிடையே செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்து விற்பதாக உணவுப் பாதுகாப்புத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பனுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினர் பழக்கிடங்குகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது பன்னீர்செல்வம், காளிமுத்து மற்றும் பாபு ஆகியோரின் பழக் கிடங்குகளில் செயற்கை முறையில் குறிப்பாக எத்திலின் கேஸ் சேம்பருக்கு (புகை) பதிலாக எத்திலின் மருந்தை பழங்கள் மீது நேரடியாக தெளித்து பழுக்க வைத்ததும், சோடா உப்பில் தண்ணீர் கலந்து பழங்களுக்கு தெளித்துள்ளதும் தெரியவந்தது.
இதன்பையடுத்து மூன்று பேரின் கிடங்கில் இருந்து சுமார் 1.25 டன் மாம்பழங்கள், 1.75 டன் வாழைப் பழங்கள் என மொத்தம் 3 டன் பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு இரண்டரை இலட்சமாகும்.
சம்பந்தப்பட்டவர்களின் மீது வழக்குப் பதிந்து அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று உணவுப் பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தனர்.