கருணாநிதி அடக்கத்திற்கு பிறகும் தொடரும் மரண ஓலம்; அதிர்ச்சியில் நாமக்கல்லில் ஒரே நாளில் 3 பேர் இறப்பு...
கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மற்றும் அடக்கத்தை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்த நாமக்கல்லைச் சேர்ந்த மூன்று பேர் சோகம் தாங்காமல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். இதனால் இப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
கடந்த 7-ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் மாலை 6.110 மணியளவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி இயற்கை எய்தினார். பின்னர், அவரின் உடல் கோபாலபுரம் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து இராஜாஜி அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து மெரினாவுக்கு கொண்டு சென்று அறிஞர் அண்ணாவின் பக்கத்தில் தம்பி கலைஞர் நல்லடக்கம் செய்யப்பட்டார். கருணாநிதி இறந்த செய்தி வெளியிடப்பட்டதில் இருந்து மெரினாவில் அடக்கம் செய்யப்படும் வரை மொத்த தமிழ்நாடே சோகத்தில் மூழ்கியது.
கருணாநிதி இறந்துவிட்டார் என்ற செய்தியை டி.வி.யில் பார்த்ததால் தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் கூட மன வேதனையில் ஆழ்ந்தனர். அவ்வாறு கருணாநிதி இறந்த சோகம் தாக்கியதில் நாமக்கல்லில் மட்டும் இதுவரை 15 பேர் இறந்துள்ளனர். அவர்களின் பட்ட்டியல் பின்வருமாறு:
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஒன்றியம், அலவாய்பட்டி ஊராட்சியைச் சேர்ந்தவர் கணபதி (87). நெசவுத் தொழிலாளியான இவர் இராசிபுரம் வட்ட தி.மு.க. துணைச் செயலாளர, வெண்ணந்தூர் ஒன்றிய அவைத் தலைவர், அலவாய்பட்டி கிளைச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
கருணாநிதி இறந்ததால் சோகத்தில் மூழ்கியிருந்த கணபதி, நேற்று முன்தினம் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதை டி.வி.யில் பார்த்து புழுங்கினார். இதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோல இராசிபுரம் ஒன்றியம், மலையாம்பட்டியைச் சேர்ந்த பெரியசாமி மனைவி பெருமாயியம்மாள். தி.மு.க. தொண்டரான இவர் நேற்று முன்தினம் கருணாநிதியின் இறுதி அஞ்சலியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோன்று, ஆண்டிப்பட்டிப்புதுரைச் சேர்ந்த தி.மு.க. தொண்டரான ஆறுமுகம் (75) கருணாநிதி இறந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாமல் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
கருணாநிதி இறந்த சோகம் தாழாமல் இப்படி ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.