முன்னாள் முதல்வர் ஜெ. நினைவிடம் - 2-வது நாளாக தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் 2வது நாளாக அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். இதைதொடர்ந்து நேற்று மாலை 4.30 மணியளவில் ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டு இருந்த ராஜாஜி அரங்கில் இருந்து எம்.ஜி.ஆர் நினைவிடத்துக்கு கொண்டு சென்று, அரசு மரியாதையுடன் மாலை 6.10 மணியளவில் குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.
இதில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான அதிமுக கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் வந்து மலர்கள் தூவி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்த இடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மேலும் கட்சி உறுப்பினர்கள், தொண்டர்கள், மற்றும் பொதுமக்கள் என பலர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நினைவிடத்துக்ற்கு வந்த வண்ணம் உள்ளனர். நேற்று முழுவதும் போக்குவரத்து இல்லாததால் பொதுமக்கள் இங்கு வர இயலவில்லை.
ஆனாலும், பல்வேறு பகுதிகளில் இருந்து மின்சார ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் வந்து, அங்கிருந்து பறக்கும் ரயில் மூலம் சிந்தாதிரிபேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி, ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டு இருந்த ராஜாஜி அரங்குக்கு நடந்தே சென்றனர்.
முக்கிய கட்சி நிர்வாகிகளும் கட்சி தொண்டர்களும் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று அவர்களது அஞ்சலியை செலுத்தினர்.
இந்நிலையில் இன்று போக்குவரத்து தொடங்கியதால் அதிகாலை முதல் பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும் ஜெயலலிதாவின் உடலுக்கு 2 வது நாளாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தற்போது, மெரினா காமராஜர் சாலையில் லோசான மழை தூரல் இருந்து வருகிறது. ஆனாலும், அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.