நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த 21 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை 3 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. நேற்று முன் தினம் 9 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 21 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் 21 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் அவ்வப்போது கைது செய்து வருகிறது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. இதன் காரணமாக வாழ்வாதாரம் இழந்து மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் விவகாரத்தில் சுமூகமான நிலை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.அதே நேரத்தில் இலங்கை கடற்படை கட்டுப்பாட்டில் இருக்கும் படகுகளை மீட்டு தரவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே கடந்த 2 மாதமாக மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் தடை காலம் முடிந்து கடந்த 15 ஆம் தேதி தான் மீனவர்கள் மீண்டும் மீன் பிடிக்க சென்றனர்.

3 நாட்களில் 30 பேர் கைது

அப்போது நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது ஒரு படகு பழுதாகி நின்றுள்ளது. அந்த படகில் இருந்த 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்து அழைத்து சென்றது. இந்த சம்பவம் நடந்து முடிந்த அடுத்த தினமே மீண்டும் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியை சேர்ந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை காங்கேசன் துறைமுகத்திற்கு மீனவர்களை கொண்டு செல்லப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு தினங்களில் மட்டும் 30 தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கைது செய்துள்ள சம்பவம் மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது.! இலங்கை கடற்படையினரின் அத்துமீறலால் அதிர்ச்சியில் மீனவர்கள்