Asianet News TamilAsianet News Tamil

தமிழக வெற்றி கழகத்திற்கு 2026 தான் இலக்கு: புஸ்ஸி ஆனந்த்!

தமிழக வெற்றி கழகத்திற்கு 2026 தான் இலக்கு என அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்

2026 election is the target for Tamilga Vetri Kazhagam says bussy anand smp
Author
First Published Jun 9, 2024, 5:40 PM IST | Last Updated Jun 9, 2024, 5:40 PM IST

திரைத்துறையில் புகழின் உச்சத்தில் உள்ள நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வந்தார். விலையில்லா விருந்தகம், தளபதி விஜய் பயிலகம் போன்ற நலத்திட்டங்கள் மக்கள் மத்தியில்  விஜய் மக்கள் இயக்கத்திற்கு பெருமை சேர்த்து தந்தது. இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை நடிகர் விஜய் தொடங்கினார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் எனவும் அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

 இந்த நிலையில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. தமிழகத்திலேயே முதல் முதலாக அக்கட்சியின் மாவட்ட அலுவலகம் புதுக்கோட்டையில்தான் திறக்கப்படுகிறது. 50 லட்சம் ரூபாயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள மாவட்ட அலுவலகத்தை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், குத்துவிளக்கு ஏற்றியும், ரிப்பன் வெட்டியும் திறந்து வைத்தார். முன்னதாக  பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதன்பின்னர் தொண்டர்களிடம் பேசிய அவர், “நடிகர் விஜயின் கட்டளையை நிறைவேற்ற தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும். முதலில் தொழில் நடத்தி சம்பாதிக்க வேண்டும் அதன் பின்னர்  குடும்பத்தை கவனிக்க வேண்டும். அதற்கு அடுத்தபடியாக சம்பாதித்த காசில் ஒரு சதவீதமோ இரண்டு சதவீதமோ பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான் நடிகர் விஜயின் கட்டளை அதை ஒவ்வொரு தொண்டனும் நிறைவேற்ற வேண்டும். நடிகர் விஜய் கூறியவாறு 2026தான் நமது இலக்கு 2026இல் கண்டிப்பாக தமிழக வெற்றி கழகம் வெற்றி பெறும் அதற்கு ஒவ்வொருவரும் அயராது உழைக்க வேண்டும்.” என கேட்டுக் கொண்டார்.

நாம் யாரையும் விமர்சனம் செய்து பேச வேண்டாம். நம்மளுடைய மக்கள் பணியை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம். பொதுமக்கள் பிரச்சனையில் முன்னுரிமை கொடுத்து அவர்களுடைய பிரச்சனையை தீர்ப்பதற்கு தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் எனவும் புஸ்ஸி ஆனந்த் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், நடிகர் விஜய் கூறியவாறு நாங்கள் மக்கள் பணி செய்து வருகிறோம் என்றார். நாம் தமிழர் கட்சியோடு கூட்டணி சேருவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், எதுவாக இருந்தாலும் எங்களுடைய தலைவர் நடிகர் விஜய்தான் இதுகுறித்து அறிவிப்பார் என்றார்.

தேர்தல் ஆணையம் மாநில கட்சியாக தமிழக வெற்றி கழகத்தை அங்கீகரிப்பதற்கு நோட்டிபிகேஷன் கொடுத்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த புஸ்ஸி ஆனந்த், நாங்கள் கொடுத்துள்ளோம். அதன்படி தேர்தல் ஆணையம் நோட்டிபிகேஷன் கொடுத்துள்ளது விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்றார். மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆகியுள்ளது குறித்த கேள்விக்கு, இது குறித்து தலைவர் பதிலளிப்பார் என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.

கழன்று ஓடிய டயர்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண் காவல் ஆய்வாளர்!

தொடர்ந்து  பேசிய அவர், “தமிழக தேர்தல் நடப்பதற்கு இன்னமும் இரண்டு வருட காலம் உள்ளது ரொம்பவும் அவசரப்பட வேண்டாம். தமிழக வெற்றி கழகம் மக்களோடு இணைந்து மக்கள் பணியாற்றி வருகிறது. அடுத்ததாக நாமக்கல்லில் மாவட்ட அலுவலகம் திறக்கப்பட உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த கூட்டம் வரும் 18ஆம் தேதி நடக்கும் என்று நாங்கள் கூறவில்லை. எப்படி இந்த செய்து வெளியானது என்று தெரியவில்லை. அப்படி ஒரு கூட்டம் பதினெட்டாம் தேதி நடப்பதாகவே இல்லை.” என்றார்.

உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த புஸ்ஸி ஆனந்த், 2026 ஆம் ஆண்டு தான் எங்களுடைய இலக்கு என்று ஏற்கனவே தலைவர் விஜய் அறிவித்து விட்டார். இதனால் இந்த கேள்வி எழுவதற்கு வாய்ப்பு இல்லை என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios