தாம்பரத்தில் பெண் காவல் ஆய்வாளர் சென்ற வாகனத்தின் டயர் கழன்று ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ஜெயலட்சுமி. இவர் வழக்கம் போல் நேற்று இரவு பணியை முடித்து விட்டு அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள அரசு (டாட்டா சுமோ) வாகனத்தில் மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். காரை அவரது ஓட்டுநர் காவலர் பாண்டியன் ஓட்டிச் சென்றுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அப்போது ஜிஎஸ்டி சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது காரின் பின்புறம் உள்ள டயர் திடீரென கழன்று ஓடியுள்ளது. இதயடுத்து கட்டுப்பாட்டை இழந்த கார் சிறிது தூரம் சென்று நின்றுள்ளது. இதில் கார் ஓட்டுநர் மற்றும் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி ஆகியோர் எந்த ஒரு காயமும் இன்றி உயிர் தப்பினர்.

இதையடுத்து காரில் இருந்து இறங்கி இருவரும் விபத்துக்குள்ளான காரை வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் காவல்துறையில் கொடுக்கப்பட்டுள்ள பழைய வாகனங்களை அரசு பழுது பார்த்து சரி செய்து கொடுக்க வேண்டும் எனவும் சக காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.