எல்லை தாண்டி சென்றதாக கூறி தொடர்ந்து இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், கடும் எச்சரிக்கையோடு 19 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுவித்துள்ளது.
தமிழக மீனவர்கள் கைது
தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் கடலில் எல்லைகள் தெரியாமல் இலங்கை பகுதிக்குள் செல்ல நேரிடுகிறது. தின் காரணமாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்துவது, படகுகளை மூழ்கடிப்பது, வலைகளை அறுப்பது, மீனவர்களை கைது செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த மார்ச் 29-ம் தேதி ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர், மார்ச் 31-ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேர், ஏப்ரல் 3-ம் தேதி ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் என மொத்தம் 19 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். இவர்கள் மீது எல்லை தாண்டிமீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைதாக்கல் செய்யப்பட்டது. அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் வழக்கின் விசாரணை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நடைபெற்றது.

2 ஆண்டு சிறை -நீதிமன்றம் எச்சரிக்கை
ஏற்கனவே மீனவர்களை விடுவிக்க தலா 2 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த சம்பவம் தமிழக மீனவர்களை அதிர்ச்சி அடையவைத்திருந்தது. தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதி கஜநிதிபாலன் தனது உத்தரவில், மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் 19 பேரையும் விடுதலை செய்வதாகத் தெரிவித்தார்.மேலும் சம்பந்தப்பட்ட விசைப்படகுகளின் உரிமையாளர்கள் வரும் ஜூன் 14-ம் தேதி உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதனையடுத்து 19 மீனவர்களும் இந்திய துணை தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
