முதல்வர் முன் 2 பெண்கள் தற்கொலை முயற்சி! எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பரபரப்பு!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட விழாவில் 2 பெண்கள், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசு சார்பில் மறைந்த முன்னால் முதல்வர் எம்ஜிஆர் அவர்களை நினைவு கூறும் வகையில் ‘எம்ஜிஆர் நூற்றாண்டு விழா’ அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று சிவகாசியில் ‘எம்ஜிஆர் நூற்றாண்டு விழா’ நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே சிவகாசி நகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
3 மணி அளவில் இந்த நிகழ்ச்சி துவங்கியது. அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது, மேடை அருகில் இருந்த 2 பெண்கள் திடீரென கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர்.
உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை மீட்டு, ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு முயன்ற பெண்கள் சத்யா மற்றும் அவரின் தாயார் பார்வதி. இவர்கள் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர்கள்.
தற்கொலை முயற்சி குறித்து அவர்களிடம் கேட்டபோது, போலீசார் அழைத்து சென்ற தனது கணவரை விடுவிக்கக்கோரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சத்யா தெரிவித்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.