தீக்குளிக்க முயன்ற 2 ஆயுதப்படை காவலர்கள் கைது!
சென்னை டிஜிபி அலுவலகம் அருகே தற்கொலைக்கு முயன்ற ஆயுதப்படை காவலர்கள் கணேஷ், ரகு ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப்படை போலீசார் கணேஷ், ரகு. தங்களை சாதி ரீதியாக உயர் அதிகாரிகள் நடத்துவதாக குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து புகார் கொடுப்பதற்காக டிஜிபி அலுவலகம் வந்துள்ளனர். தாங்கள் கொண்டு வந்த புகாரை கொடுத்து விட்டு வெளியே வந்தனர். அவர்களிடம் இருந்து
புகார் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதாக தெரிகிறது.
இதன் பின்பு வெளியே வந்த கணேஷ், ரகு, செய்தியாளர்களைச் சந்நித்து வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் இருவரும் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தங்கள் மீது ஊற்றிக் கொண்டனர். இதனைப் பார்த்து அதிர்ந்துபோன அருகில் இருந்தபோலீசார், அவர்களிடம்
இருந்து மண்ணெண்ணெய் கேனை பறித்தனர். மேலும் கணேஷ், ரகு மீது தண்ணீர் ஊற்றி அவர்கள் டிஜிபி அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்றனர்.
கணேஷ், ரகு இருவரும் 2013 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. சென்னையில் இருந்து தேனி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட அவர்கள், தேனி மாவட்டத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். தேனி மாவட்ட முதலாம்படை பிரிவின் ஆயுதப்படை
ஆய்வாளர் சீனிவாசன் காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முயன்ற காவலர்கள் கணேஷ், ரகுவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில், தற்கொலைக்கு முயன்ற கணேஷ், ரகு இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது தற்கொலைக்குக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.