பவானிசாகர் வனத்தில் வேட்டையில் ஈடுபட்டு மானைக் கொன்று இறைச்சியைக் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், இருசக்கர வாகனங்களில் 30 கிலோ இறைச்சியுடன் வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
பவானிசாகர் வனப் பகுதியான காடேபாளையத்தில் வனத் துறையினர் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் சோதனையிட்டபோது சாக்குப் பையை சோதனை செய்தனர். அப்போது, அவர்கள் மான் இறைச்சி கடத்திச் செல்வது தெரியவந்தது.
அவர்களிடமிருந்த மான் தலை, கால், இறைச்சி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிட மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்கள் ஒத்தபணங்காட்டைச் சேர்ந்த சாமிநாதன், மாரன் என தெரியவந்தது.
மேலும், இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் வனத் துறையினரைக் கண்டதும் தப்பியோடினர்.
பிடிபட்டவர்கள் அளித்த தகவலின்படி, தப்பியோடியவர்களிடம் 30 கிலோ மான் இறைச்சி இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், ஒத்தபணங்காடு வனத்தில் சுருக்கு கம்பி வைத்து அதில் சிக்கிய 2 மான்களை கொன்று, அதன் இறைச்சியைக் கடத்தியதும், இதில், 7 பேர் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
தப்பியோடிய ஐந்து பேரை வனத் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
