நாமக்கல் அருகே 170 லோடு மணல் பறிமுதல் – வருவாய் மற்றும் கனிமவள அதிகாரிகள் அதிரடி...
நாமக்கல் அருகே பதுக்கி வைக்கபட்டிருந்த 170 லோடு மணலை வருவாய் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
நாமக்கல் அருகே பள்ளிபாளையத்தில் சட்டத்திற்கு விரோதமாக அதிகமாக மணல் கடத்தபடுவதாகவும் பதுக்கி வைக்கபடுவதாகவும் வருவாய் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்த வண்ணம் இருந்தன. மேலும் அதிகாரிகளுக்கு ரகசிய தகவலும் வந்தது.
தகவலறிந்த அதிகாரிகள் பள்ளிப்பாளையம் அண்ணாநகரில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு மணல் பதுக்கி வைக்கபட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அப்பகுதியில் பதுக்கி வைக்கபட்டிருந்த 170 லோடு மணலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் மணல் பதுக்கி வைத்திருந்த லாரிகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.