157 people arrested for trying to investigate the Cauvery dispute

திருச்சி

காவிரி பிரச்சனையை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வலியுறுத்தி திருச்சியில் இருந்து கர்நாடகாவுக்கு நடைபயணமாக புறப்பட்ட 157 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், 

நீதியை தாமதப்படுத்தும் உச்ச நீதிமன்றத்தைக் கண்டித்தும், 

குறைந்தபட்ச தண்ணீரைகூட தர மறுக்கும் கர்நாடகாவின் போக்கை கண்டித்தும், 

இவற்றுக்கு முடிவுகட்ட வேண்டுமானால், காவிரி பிரச்சனையை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடகா மாநிலம் நோக்கி "காவிரி மீட்பு நடைபயணம்" மேற்கொள்ள போவதாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சி அறிவித்திருந்தது.

இந்தப் போராட்டத்திற்கு திருச்சி மாநகர காவலாளர்கள் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் நேற்று திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு இருந்து நடைபயணம் தொடங்கும் என அக்கட்சியின் தலைவர் கே.எம்.சரீப் தெரிவித்திருந்தார். 

இதனையொட்டி, நேற்று காலை 8 மணி முதலே தலைமை தபால் நிலையம் முன்பு திரளான காவலாளர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர்.

காலை 11.30 மணிக்கு, நடைபயணம் மேற்கொள்வதற்காக திரளான பெண்களுடன் அக்கட்சியினர் திரண்டனர். அப்போது காவிரி பிரச்சனையை இனி சர்வதேச நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும் எனவும், உச்ச நீதிமன்றம் விசாரித்தால் தமிழகத்திற்கு எந்த பயனும் கிடையாது என்று கூறி மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

இதற்கு கட்சியின் தலைவர் கே.எம்.சரீப் தலைமை வகித்தார்.மாநில வர்த்தக அணி செயலாளர் சக்கரை கனி, திருச்சி மாவட்ட தலைவர் ராயல் சித்திக், தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் முகமது அசாருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 இதில் நிர்வாகிகள் சந்திரசேகரன், வெற்றிச்செல்வன், தர்மலிங்கம், சபி அகமது, நஜ்முதீன் உள்பட பலர் பங்கேற்றனர். பின்னர் தலைமை தபால் நிலையம் அருகில் இருந்து கர்நாடகா நோக்கி நடைபயணம் செல்ல புறப்பட்டனர். அவர்களை காவலாளர்கள் தடுத்து நிறுத்தினர். 

நடைபயணம் புறப்பட்ட 97 பேர் பெண்கள் உள்பட 157 பேரை கண்டோன்மெண்ட் காவல் உதவி ஆணையர் சச்சிதானந்தம் தலைமையிலான காவலாளர்கள் கைது செய்தனர்.