சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2 இலட்சம் மதிப்புள்ள 1140 சாராய புட்டிகள்; ஒருவர் கைது; மற்றொருவர் தப்பியோட்டம்...
விழுப்புரம்
சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2 இலட்சம் மதிப்புள்ள 1140 புதுச்சேரி சாராய புட்டிகளை விழுப்புரம் மாவட்ட காவலாளர்கள் பறிமுதல் செய்து காரில் வந்த ஒருவரை கைது செய்தனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி, புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக சாராய புட்டிகள் கடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் காவலாளர்களுக்கு மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி, கோட்டக்குப்பம் மது விலக்கு சோதனைச் சாவடியில் நேற்று காலை சிறப்பு உதவி ஆய்வாளர் குர்திஷ்பாஷா தலைமையில் காவலாளர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தினர். காரை சோதனையிட்டு கொண்டிருக்கும்போதே காரின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடன் வந்த மற்றொருவர் தப்பி ஓட முயன்றபோது, அவரை காவலாளர்கள் மடக்கிப் பிடித்து காரை சோதனையிட்டனர்.
அதில், 35 அட்டைப் பெட்டிகளில் 1140 புதுச்சேரி சாராய புட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இந்த சாராய புட்டிகளின் மதிப்பு சுமார் ரூ.2 இலட்சம்.
பின்னர் பிடிப்பட்டவரிடம் மேற்கொண்ட விசாரணையில், காவலர் பிடியில் சிக்கியவர் புதுச்சேரி உப்பளம் ஒளவை நகரைச் சேர்ந்த ஆனந்தன் (46) என்பதும், தப்பி ஓடியவர் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்த பாண்டி என்பதும் தெரியவந்தது.
இவர்கள் இருவரும் புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு சாராய புட்டிகளை கடத்திச் செல்ல முயன்றுள்ளனர் என்பதும் தெரிந்தது. இதனையடுத்து, ஆனந்தனை காவலாளர்கள் கைது செய்தனர். அந்த சாராய புட்டிகளை காருடன் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.