வயது முறைகேட்டால் அசம்பாவிதம்... 10-வது மாடியில் இருந்து விழுந்து சிறுவன் உள்பட 2 பேர் பலி!
சென்னை தாடண்டர் நகரில் அரசு சார்பில் 10 அடுக்கு மாடி கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான கட்டுமான பணியை, நாமக்கல்லை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் செய்து வருகிறது.
சென்னை தாடண்டர் நகரில் அரசு சார்பில் 10 அடுக்கு மாடி கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான கட்டுமான பணியை, நாமக்கல்லை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் செய்து வருகிறது. இங்கு பல்வேறு வடமாநிலங்களும், தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்க்கின்றனர்.
இதில், கடலூர் மாவட்டம் வானமாதேவியை சேர்ந்த அரிகோவிந்த் (45), காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அருகே மஞ்சள் வளாகம் கிராமத்தை சேர்ந்த முருகவேல் (எ) பிரவீன் (14) ஆகியோர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு அரிகோவிந்த், முருகவேல் ஆகியோர் கட்டிடத்தின் 10-வது மாடியில் வேலையில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக 2 பேரும், 10-வது மாடியில் இருந்து கீழே விழுந்தனர்.
அப்போது, கட்டிடத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து, மயங்கி கிடந்தனர். இதை பார்த்த சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக 2 பேரையும் மீட்டு, சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்தபோது, சிறுவன் முருகவேல் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அரிகோவிந்துக்கு சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புகாரின்படி சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் கட்டுமான நிறுவன அதிகாரிகளிடம் தீவிரமாக விசாரிக்கின்றனர். இறந்த சிறுவன் வேல்முருகனுக்கு 14 வயதாகிறது. ஆனால் தனியார் கட்டுமான நிறுவனம், அவனுக்கு 18 வயது என முறைகேடு செய்து பணியில் ஈடுபடுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
அதேபோல், மருத்துவமனையில் 18 வயது என குறிப்பிட்டுள்ளனர். ஆனால், சிறுவனின் குடும்பத்தினர், வறுமை காரணத்தால், அவன் வேலைக்கு சென்றதாகவும், அவனுக்கு 14 வயதே ஆவதாகவும் தெரிவித்தனர். இதற்கிடையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும்போது, பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் கட்டிடம் கட்டப்படுவதால், இந்த பிரச்சனையை மூடி மறைக்கும் வேலைகள் நடப்பதாக போலீசார் சிலர் கூறினர்.