தமிழகத்தில் 10 ஆயிரம் பொறியியல் இடங்கள் குறைப்பு 28 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை; ஏ.ஐ.சி.டி.இ. அதிரடி உத்தரவு...
தமிழகத்தில் வரும் 2017-18ம் கல்வியாண்டில் இருந்து பொறியியல் மாணவர்களுக்கான 10 ஆயிரம் இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன, 28-க்கும்மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறுத்திவைத்து அனைத்து இந்திய பொறியியல் கல்லூரிக்கான குழு(ஏ.ஐ.சி.டி.இ.) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அடுக்கடுக்கான புகார்கள்
நாடுமுழுவதும் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு போதுமான கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்கள் வசதிகள், ஆய்வரங்கு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று ஏ.ஐ.சி.டி.இ புகார்கள் சென்றன. இதனால், மாணவர்களின் கல்வித்திறன் வெகுவாக பாதிக்கபட்டுவருவதாகவும் குற்றச்சாட்டு சென்றது.
திடீர் ஆய்வு
இதையடுத்து அனைத்து இந்திய பொறியியல் கல்லூரிக்கான குழுவின் தலைவர் அணில்சகாஸ்ரபுதே தலைமையில் நாடுமுழுவதும் 311 பொறியியல் கல்லூரிகளில் சனிக்கிழமை திடீர் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தமிழகத்தில் மட்டும் 41 பொறியியல் கல்லூரிகள் அடங்கும்.
அதிரடி நடவடிக்கை
இந்த ஆய்வின் முடிவில் பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்களிடம் வாங்கும் கட்டணத்துக்கு ஏற்றார்போல் எந்தவிதமான அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை, கட்டமைப்பு வசதிகள் இல்லை, பயிற்சியளிக்கும் தகுதியான ஆசிரியர்கள் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, பல அதிரடி நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்தனர்.
அது குறித்து அனைத்து இந்திய பொறியியல் கல்லூரிக்கான குழு(ஏ.ஐ.சி.டி.இ.)தலைவர் அணில்சகாஸ்ரபுதே நிருபர்களிடம் கூறியதாவது-
22 கல்லூரிகள்
தமிழகத்தில் 22 பொறியியல் கல்லூரிகள்தாங்களாவே முன்வந்து கல்லூரியை மூட விண்ணப்பம் செய்துள்ளனர். இதன் மூலம் ஏறக்குறைய 8ஆயிரத்து 700 பொறியியல் மாணவர்களுக்கான இடங்கள் குறைந்துள்ளது. இதில் 5 பொறியியல் கல்லூரிகள், 3 பட்டயப்படிப்பு கல்லூரிகள், எம்.பி.ஏ. எம்.சி.ஏ. படிப்பு நடத்தும் 14 கல்வி நிறுவனங்கள் அடக்கம்.
தடை
மேலும், நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் மாணவர்களுக்கு போதுமான வசதிகள், கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருந்ததையடுத்து, 6 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடக்க தடை விதித்துள்ளோம். இதன் மூலம் ஆயிரத்து 500 மாணவர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக வரும் கல்வி ஆண்டில் 10 ஆயிரம் மாணவர்களுக்கான இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
154 கல்லூரிகள்
இந்த கல்லூரிகள் கன்னியாகுமரி, மதுரை, கோவை, சேலம், காரைக்கால் ஆகிய இடங்களில் உள்ளன. மேலும், 154 கல்லூரிகள் பல சிறப்பு ‘கோர்ஸ்களை’ நடத்த முடியவில்லை என்று எழுதி கொடுத்துள்ளன. சில கல்லூரிகளுக்கு எச்சரிக்கை மட்டும் செய்து, நோட்டீஸ்அளித்துள்ளோம். அந்த கல்லூரிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனைத்து வசதிகளையும் நிறைவு செய்ய வேண்டும்.
சேர்க்கை கிடையது
தாங்களாவே மூடுவதற்கு விண்ணப்பம் கொடுத்த பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெறாது. அடுத்த ஆண்டு முதல், ஒவ்வொரு பொறியியல் கல்லூரியிலும் அங்கீகரிக்கப்பட்ட மாணவர்கள் சேர்க்கையில் 30 சதவீதம் குறைந்தபட்சம் இருக்க வேண்டும் இல்லாவிட்டால், அந்த கல்லூரிகளை நாங்களே மூடும் திட்டம் வைத்துள்ளோம்.
புதிய அனுமதி
மேலும், இந்த ஆண்டு புதிதாக தமிழகத்தில் 8 பார்மசி கல்லூரிகள், 2 பொறியல் கல்லூரிகள், 2 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 4 முதுகலைப் மேலாண்மை பட்டயப் படிப்பு கல்லூரிகளுக்கும்அனுமதி தரப்பட்டுள்ளது
இவ்வாறு அவர் தெரிவித்தார்.