நாகர்கோவில்,

இனி ஏ.டி.எம்மில் நாளொன்றுக்கு ரூ.10 ஆயிரம் எடுக்கலாம் என அறிவித்திருந்தது மத்திய அரசு. ஆனால், பணம் எடுக்கச் சென்றால் ஏ.டி.எம் இயந்திரங்கள் வேலை செய்யாததால் மூடிக் கிடக்கின்றன. அரசு வங்கிகளின் ஏ.டி.எம்கள் மட்டுமே. தனியார் வங்கி ஏ.டி.எம்கள் சிறப்பாக செயல்படுகிறது.

வங்கிகளில் வாரம் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.24 ஆயிரம் வரை மட்டுமே எடுக்க முடியும் என்ற உச்சவரம்பு தளர்த்தப்பட்டு ரூ.1 இலட்சம் வரை எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு சில தினங்களே ஆகிறது.

ஏ.டி.எம்.களில் நாள் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் என்று உயர்த்தப்பட்டுள்ளது.

இவையனைத்தும் பொங்கல் விடுமுறையில் இருக்கும்போது அறிவிக்கப்பட்டது எனபதால் அதற்கான பயனை மக்கள் அனுபவிக்க முடியவில்லை.

பொங்கல் தினமான கடந்த 14–ந் தேதி (சனிக்கிழமை) முதல் எம்.ஜி.ஆரின் 100–வது ஆண்டு பிறந்தநாள் விடுமுறையான நேற்று வரை 4 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

இதனால், தமிழக மக்கள் பணம் எடுக்க முடியாமல் அவதியடைந்தனர். அதில், குமரி மாவட்ட மக்களும் அடங்குவர்.

கிராமப்புறங்களில் ஏ.டி.எம்.கள் இன்னும் சரியாக செயல்படவில்லை, நகர்ப்புறங்களில் ஏ.டி.எம் பெரும்பாலான நேரம் பூட்டியே கிடக்கிறது. இதில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் ஏ.டி.எம்.களும் அடக்கம். இதனால், ஏ.டி.எம்.களிலும் பணம் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

செயல்பட்டுக் கொண்டிருந்த ஏ.டி.எம்.களில் வங்கிகளின் தொடர்விடுமுறை காரணமாக பணம் இல்லாமல் மூடப்பட்டிருந்தன. சில ஏ.டி.எம்.களில் “பணம் இல்லை“என்ற அறிவிப்பு பலகையும் தொங்க விடப்பட்டிருந்தது. அதைகூட ஏற்றுக் கொள்ளலாம் சில ஏ.டி.எம்கள் “அவுட் ஆப் சர்வீஸ்” என்ற அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர்.

இதனால் பொதுமக்கள் பணம் எடுக்க ஒவ்வொரு ஏ.டி.எம். ஆக அலைந்து திரிகின்றனர். அரசு ஏ.டி.எம்கள் இப்படி இருக்க, தனியார் வங்கிகளின் ஏ.டி.எம்.கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. அங்கு பணம் நிரப்பபடுகிறது. ஏ.டி.எம்களும் நன்றாக செயல்படுகிறது.

ரூ.10 ஆயிரம் நாளொன்றுக்கு எடுக்கலாம் என அறிவிப்பு வெளியானது. இங்க வந்து பார்த்தால் அரசு வங்கிகளின் ஏ.டி.எம் இயந்திரம் செயல்படாமல் மூடப்பட்டுள்ளன. ஆனால், தனியார் ஏ.டி.எம்களில் எப்போது சென்றாலும் பணம் வைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து அரசும் தனியார் மயமானதை நன்றாக உணரமுடிகிறது என்று வருத்தம் தெரிவிக்கின்றனர் மக்கள்.