வீட்டில் புகுந்து 10 சவரன் நகை திருட்டு; அவசரத்தில் ஹெல்மெட்டுகள், மடிக்கணினிகளை விட்டுசென்ற திருடர்கள்...
திருப்பூர்
திருப்பூரில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் புகுந்து 10 சவரன் நகைகளை திருடிக்கொண்டு அவசர அவசரமாக செல்லும்போது ஹெல்மெட்டுகள், மடிக்கணினிகள் போன்றவற்றை அங்கேயே போட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.
திருப்பூர் மாவட்டம், முத்தூர், கொடுமுடி சாலையில் உயர்நிலைப் பள்ளி மேடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (50). வெல்டிங் பட்டறை தொழில் செய்து வருகிறார்.
வீட்டில் யாருமில்லாத நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் வெளியில் சென்றிருந்த பழனிசாமியின் மகன் கிருஷ்ணமூர்த்தி வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் முன்புறம் 2 இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதும், அருகில் அடையாளம் தெரியாத நபர் நின்று கொண்டிருப்பதையும் கிருஷ்ணமூர்த்தி பார்த்துள்ளார்.
உடனே, அவர் அருகில் வசிக்கும் தனது உறவினரை அழைத்துக்கொண்டு வந்தபோது, மர்ம நபர் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அப்போது வீட்டுக்குள் இருந்து வெளியேறிய இரண்டு மர்ம நபர்கள் அரிவாளைக் காட்டி கிருஷ்ணமூர்த்தியையும், அவரது உறவினரையும் மிரட்டிவிட்டு மற்றொரு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
மர்ம நபர்கள் வீட்டு பீரோவில் இருந்த 10 சவரன் நகைகள், ஆயிரம் ரூபாய் ரொகத்தைத் திருடிச் சென்றனர்.
அவசரத்தில் சென்ற திருடர்கள் தங்களிடமிருந்த சில முகமூடிகள், இரண்டு பைகள், இரண்டு கத்திகள், இரண்டு ஹெல்மெட்டுகள், மூன்று மடிக்கணினிகள், திண்பண்டங்கள், சில்லறைக் காசுகளை அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து வெள்ளக்கோவில் காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.