public exam : 10, 12 ஆம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு கட்டாயம் பொது தேர்வு… அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம்!!
10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு கட்டாயம் பொது தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு கட்டாயம் பொது தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக தொடர்ந்து சட்டரீதியாக போராடிக் கொண்டிருக்கிறோம். ஏற்கனவே டெல்லி சென்று பிரதமரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வலியுறுத்தினார். அதன் பிறகு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி புகார் தெரிவிக்கக் கூடிய எண்ணை அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் பள்ளி வளாகத்திற்குள் விளம்பரப்படுத்த வேண்டும் எனவும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி 14417 என்ற புகார் என்னையும் அனைத்து பள்ளிகளிலும் அனைத்து வகுப்புகளிலும் மாணவர்கள் அறியும்படி வெளிப்படையாக விளம்பரப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் வெளிப்படையாக தாங்கள் முன் வந்து புகார் அளிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் தனது வீடியோ பதிவு மூலமாக கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகம் முழுவதும் 412 வட்டங்களுக்கு வட்டத்திற்கு இரண்டு மருத்துவர்கள் என மாணவர்களை கண்காணிக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை கொண்டும் மாணவர்களின் மன ரீதியான பிரச்சினைகளை ஆய்வு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மற்றும் மார்ச் மாதத்தில் முன்திருத்த தேர்வுகள் நடத்தப்பட்டு கட்டாயமாக இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் நேரடியாக நடைபெற உள்ளது. பள்ளிகள் இருக்கக்கூடிய இடத்தை, தூர அளவை பொறுத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் அமைக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் திருவாரூர் நகர பகுதியில் கூடுதலாக அரசு பள்ளி தேவைப்பட்டால் அமைத்து தரப்படும்.
தற்போதுவரை ஒமைக்கிறான் வைரஸின் வீரியம் குறைவாக இருப்பதால் ஜனவரி 3 ஆம் தேதி முதல் ஆறாம் வகுப்பு தொடங்கி பன்னிரண்டாம் வகுப்பு வரை சுழற்சி முறை வகுப்பு இல்லாமல் தினசரி வகுப்புகள் நடைபெறும் என நடந்து முடிந்த ஊரடங்கு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சரிடம் கேட்டபோது வருகின்ற 25 ஆம் தேதி மீண்டும் ஊரடங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது. அதன் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வுக் கூட்டங்கள் இன்னும் ஒரு வாரத்தில் நடைபெற உள்ளன. அதன் பிறகு எந்தெந்த இடங்களில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது என்பது தெரியவரும். அதற்கேற்ப ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார்.