உரிமைத் தொகை வேண்டுமா? நகையை கழட்டுங்க; போட்டோ எடுக்கனும் - அதிகாரி போல் நடித்து நகைகள் அபேஸ்
உளுந்தூர்பேட்டை அருகே அரசு அதிகாரிகள் போல் வந்து உரிமைத்தொகை கிடைக்காத நிலையில் புகைப்படம் எடுக்க வந்திருப்பதாகக் கூறி நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
![2 persons arrested who theft jewellery worth 2 lakhs in kallakurichi district vel 2 persons arrested who theft jewellery worth 2 lakhs in kallakurichi district vel](https://static-ai.asianetnews.com/images/01hgddbbrjna6xbbqf413274ec/whatsapp-image-2023-11-29-at-16-56-53_363x203xt.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர்பாளையம் பகுதியில் இரண்டு ஆசாமிகள் வீடு வீடாகச் சென்று தங்களை அரசு அதிகாரிகள் எனக்கூறி கலைஞர் உரிமைத்தொகை கிடைக்காதவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக வந்ததாக கூறி பல வீடுகளில் விசாரித்துள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் உள்ள சரோஜா என்பவர் வீட்டிற்கு டிப்டாப் ஆசாமிகள் இருவரும் சென்று கலைஞர் உரிமைத் தொகை குறித்து கேட்ட பொழுது சரோஜா தங்களுக்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆசாமிகள் அவரது குடும்ப அட்டையை கொண்டு வரச் சொல்லி அதிகாரிகள் போல் பேச்சு கொடுத்துள்ளார். மற்றொருவர் பின்னால் வந்து சரோஜாவை போட்டோ எடுக்க உள்ளதாகவும், அதனால் அவர் அணிந்திருந்த நகைகளை கழற்றி வைத்துவிட்டு ஆதார் அடையாள அட்டையை கொண்டு வருமாறு கூறியுள்ளனர். அப்போது அதே இடத்தில் நகைகளை கழற்றி வைத்துவிட்டு வீட்டிற்குள் உள்ள ஒரு அறைக்குச் சென்று ஆதார் அட்டையை எடுக்கச் சென்றுள்ளார்.
சரோஜா மீண்டும் வருவதற்குள் அந்த இரண்டு நபர்களும் அவர் கழற்றி வைத்த இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து சரோஜா அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் கூறிய நிலையில் அந்த 2 டிப்டாப் ஆசாமிகளும் வந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்களை அங்கிருந்தவர்கள் பார்த்துள்ளனர். அதனைக் கொண்டு எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார் இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். அவர்கள் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள முத்துநாராயணபுரத்தைச் சேர்ந்த சரவணன் என்பதும், மற்றொருவர் கடலூர் அண்ணாநகர் கேப்பர் மலை சாலையில் உள்ள ஷாஜகான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், இருசக்கர வாகனம், 3 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.