திருச்சி அருகே அரசு மதுபான கடையில் மது குடித்த இருவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தச்சங்குறிச்சி மாரியம்மன் கோயில் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் 60 வயதான முனியாண்டி. வார்டு உறுப்பினரான இவர், கொத்தனார் வேலையும் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். அதே பகுதியைச் ‌ சேர்ந்தவர் கூலி தொழிலாளியான 48 வயதான சிவக்குமார். நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று மதியம் தச்சங்குறிச்சி அரசு மதுபான கடையில் மது குடித்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதன் பின்னர் மாலையில் முனியான்டிக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தச்சங்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அதன் பின்னர் லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக இன்று காலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ஆடு திருடிய திருடன் போல அகப்பட்டு முழிக்கும் ஆளுநர்..! எத்தனை சூடுபட்டாலும் திருந்தாத ஜென்மம்- முரசொலி காட்டம்

ஆனால் செல்லும் வழியிலேயே முனியாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல், அவரது நண்பர் சிவகுமார் என்பவர் மது போதையில் உணவு அருந்தாமல் வீட்டில் படுத்து உறங்கியுள்ளார். இதையடுத்து, காலை சிவகுமாரை உணவு சாப்பிட எழுப்பியபோது அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. சிவக்குமார் தொடர்ந்து உணவு அருந்தாமல் மது குடித்து வந்ததாக அவரது உறவினர் தரப்பில் கூறப்படுகிறது. 

இது குறித்து தகவல் அறிந்த லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம், சிறுகனூர் மற்றும் கணக்கிளியநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்த திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார், ஏடிஎஸ்பி குத்தாலிங்கம் உள்ளிட்டோர் இதுதொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து காணக்கிளியநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.