திருச்சி அருகே நெடுஞ்சாலையில் லாரி மோதியதில் ஹெல்மெட் அணிந்திருந்தும் அதிகாரி ஒருவர் பலியாகியிருக்கிறார்.

திருச்சி அருகே இருக்கும் அரியமங்கலத்தைச் சேர்ந்தவர் சுப்புரத்தினம். இவரது மகன் கார்த்திகேயன்(29). இவர் திருச்சியில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தினமும் தனது இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்று வந்திருக்கிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் இருக்கும் தென்னூர் சிக்னலில் நின்று கொண்டிருந்தார். சாலையை கடப்பதற்கான சிக்னல் வந்து கிளம்பியபோது இடதுபுறமாக லாரி ஒன்று வேகமாக திரும்பியிருக்கிறது. இதை கவனிக்காத அவர் மீது லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டார். கார்த்திகேயன் முறையாக தலைக்கவசம் அணிந்திருந்தும் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்த பகுதியாக சென்றவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கார்த்திகேயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநர் பெருமாள்(42) கைது செய்துள்ளனர்.