ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் அம்மனை தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாகவும் - காவிரி வடகரையில் தேவாரப் பாடல்கள் பெற்ற ஸ்தலமாகவும் விளங்கும் திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் பிரசித்தி பெற்ற கடவுளாக பார்க்கப்படுகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தை பொருத்தவரை எல்லா வைபவங்களிலும் அம்மனுக்கே முதல் அதிகாரம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பங்குனி மாதமும் 48 நாள் பிரமோற்சவம் நடைபெறும் இந்த ஆலயத்தில் ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருவார்.

அந்த வகையில் நேற்று ஆடி மாதம் முதல் வெள்ளியை முன்னிட்டு அகிலாண்டேஸ்வரி அம்மனை தரிசனம் செய்வதற்காக திருச்சி மட்டுமல்லாமல் பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள் அதிகாலை முதலே கோவில் வளாகத்தில் குவிந்திருந்தனர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் பக்தர்களுக்கான குடிநீர் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது - மேலும் திருவானைக்காவல் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கூடுதலாக போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.