திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல். பள்ளி அறங்காவலர் உட்பட 5 பேர் கைது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் 4-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுதொடர்பாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணப்பாறைப்பட்டி பகுதியில் இயங்கி வரும் குரு வித்யாலயா CBSE பள்ளியின் அறங்காவலர் வசந்தகுமார் அப்பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் பாதிக்கப்பட்ட மாணவி 9/25 என்பவரிடம். அவரது வகுப்பறையில் உள்ள ஆசிரியரை வெளியில் அனுப்பிவிட்டு 06.02.2025-ம் தேதி காலை 10.20 மணியளவில் மேற்படி மாணவியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டுள்ளார் என்று பாதிக்கப்பட்ட மாணவியின் பாட்டி பாக்கியலக்ஷ்மி என்பவர் 06.02.2025-ம் தேதி இரவு 10.00 மணிக்கு மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த எழுத்து மூலமான புகாரின் அடிப்படையில் மேற்படி 1) வசந்தகுமார் (தாளாளர் சுதாவின் கணவர்). 2) பள்ளியின் தலைவர் மாராச்சி, 3) தாளாளர் சுதா, 4) துணை தாளாளர் செழியன் மற்றும் 5) பள்ளியின் முதல்வர் ஜெயலட்சுமி ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் வழக்கு தொடர்பாக, வழக்கில் சம்மந்தப்பட்ட அனைத்து எதிரிகளான ஐந்து நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 1-வது எதிரி வசந்தகுமார் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும் காவல்துறையினர் இவ்வழக்கில் விசாரணையை உடனடியாக மேற்கொண்டும் துரிதமாக செயல்பட்டும் வழக்கு பதிவு செய்து உடனடியாக ஐந்து எதிரிகளையும் கைது செய்தும், மேலும் இவ்வழக்கில் அனைத்து தரப்பு சாட்சியங்களையும் மற்றும் ஆவணங்களையும் பரிசீலனை செய்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி புலன் விசாரணை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக, மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யும் பொருட்டு, அனைத்து அரசு துறையினருடன் இணைந்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வரும் நிலையில், இனிவரும் காலங்களில் மேற்படி விழிப்புணர்வு முகாம் தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.