தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நிலையில் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது

இந்தியா முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் அசுர வேகம் எடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,058 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாட்டில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மே 7ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நோய் தொற்று அதிகம் இருக்கும் பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்பட மாட்டாது எனவும், கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியே உள்ள மதுபானக்கடைகள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு திறக்கப்படும் எனவும் தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது. அதன்படி தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் தலைநகர் சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்பட மாட்டாது என அரசு தெரிவித்துள்ளது. எனினும் மதுக்கடைகள் திறப்பது கொரோனா வைரஸ் பரவுதலை மேலும் அதிகரிக்கும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நிலையில் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது அதன்படி சாதாரண வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின் சில்லறை விற்பனை விலை 10 ரூபாய் கூடுதலாகவும் நடுத்தர மற்றும் பிரீமியம் வகை 180 மி.லி மதுபானம் 20 ரூபாய் வரையிலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானங்களின் மீது ஆயத்தீர்வை வரி 15 சதவீத உயர்வால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் தமிழக டாஸ்மாக் கடைகளில் அமல்படுத்தப்பட இருக்கிறது. முன்னதாக டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்களில் வரி உயர்வு காரணமாக மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.