Asianet News TamilAsianet News Tamil

திருச்சியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பலி; புத்தாண்டு தினத்தில் சோகம்

திருச்சி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உட்பட 4பேர்  பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

4 persons killed while building collapsed in trichy vel
Author
First Published Jan 2, 2024, 3:15 PM IST

திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் காந்தி தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவரது தாய் சாந்தி (வயது 70), மனைவி விஜயலட்சுமி (38), குழந்தைகள் பிரதீபா (12), ஹரிணி (10) என ஐந்து பேர் ஒன்றாக வசித்து வந்தனர். இந்த நிலையில் மாரிமுத்துவின் தங்கை கணவர் சென்னையில் இறந்து விட்டதால் அந்த துக்க நிகழ்ச்சிக்காக அவர் மட்டும் நேற்று சென்னைக்கு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டில் சாந்தி, விஜயலட்சுமி, பிரதீபா, ஹரிணி ஆகிய நான்கு பேரும் வழக்கம்போல் படுத்து உறங்கி உள்ளனர். இந்நிலையில் 1972 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அவர்களது வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடிப்பாடுகளில் சிக்கிய சாந்தி, விஜயலட்சுமி, பிரதீபா, ஹரிணி ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நள்ளிரவு நேரத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் உள்ளவர்கள் யாரும் அதனை கண்டுகொள்ளவில்லை.

விமான நிலையத்திற்கு நிகராக பேருந்து நிலையம்; பொங்கலுக்குள் அனைத்து சரியாகவிடும் - அமைச்சர் தகவல்

இந்த நிலையில் இன்று அதிகாலை பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டு மாடியில் சென்று பார்த்துள்ளார். அப்பொழுது மாரிமுத்து வீட்டின் மேற்கூரை இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து உடனடியாக அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு அரியமங்கலம் ஆய்வாளர் திருவானந்தம் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டதோடு உடனடியாக திருச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

குடும்ப தகராறில் புதுமணப்பெண் தற்கொலை; காப்பாற்றுவதற்காக குதித்த கணவனும் பலி - உறவினர்கள் சோகம்

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சி தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கி இறந்து கிடந்த நால்வரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். புத்தாண்டு பிறந்து உலகமே புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டும் வரும்  நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios