வீரகேரளம்புதூர் அருகே அரசு மதுபான கடையில் ரூ.10 அதிகம் வைத்து பீர் விற்பனை செய்த, ஊழியரிடம் பில் கேட்டு மதுப் பிரியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே உள்ள பறங்குன்றாபுரம் பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில், மது பிரியர் ஒருவர் பீர் வாங்க சென்றுள்ளார். அப்பொழுது அரசு நிர்ணயித்த விலையை காட்டிலும் ரூபாய் 10 அதிகம் கேட்டதாகவும் அதற்கு கடை ஊழியரிடம் மது பிரியர் கேட்டதற்கு கடைக்கு கரண்ட் பில் எல்லாம் கட்ட வேண்டி உள்ளது எனவும், கூலிங் பீர் வாங்க கூடுதலாக பத்து ரூபாய் வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அது குறித்து மது பிரியர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும் கடையினுள் நிர்ணயிக்கப்பட்ட ஊழியர்களை காட்டிலும் வெளியில் இருந்து வரும் தனி நபர்களும் கடையினுள் நின்று வியாபாரம் செய்வதாகவும் கூறப்படுகிறது. இதனால் மது பாட்டில்கள் கள்ள சந்தையில் 24 மணி நேரமும் விற்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Add Asianetnews Tamil as a Preferred Source

