தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புகள் தென்படுகிறது.

தமிழகத்தில் தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கி கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் வெப்பத்தை தணிக்கும் விதமாக சில மாவட்டங்களில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அது மேலும் இரு தினங்களுக்கு நீடிக்கும் எனவும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புகள் தென்படுகிறது.

தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். மேலும், குமரிகடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவை ஒட்டிய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 30 - 40 கி.மீ. வரை வீசக்கூடும். எனவே அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.