நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கில் தடயங்கள் கிடைக்காத நிலையில், இன்று அவரது தோட்டத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே ஜெயக்குமார் கடந்த மாதம் 4-ம் தேதி உடல் முழுவதும் எரிக்கப்பட்ட நிலையில் உவரி அருகே கரைசுத்து புதூரில் அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை திசையன்விளை காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், எந்த வித முன்னேற்றமும் இல்லாததால் சிபிசிஐடிக்கு இந்த வழக்கு கடந்த மே மாதம் 21ம் தேதி மாற்றப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த 2 வாரங்களாக சிபிசிஐடி ஏ டி எஸ் பி சங்கர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் உலக ராணி தலைமையிலான இரண்டு குழுவினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இதுவரையிலான விசாரணை அறிக்கையை சிபிசிஐடி ஐ.ஜி அன்புவிடம் சமர்ப்பித்து விவரங்களை தெரிவித்தனர். இந்நிலையில் இன்று சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் உலக ராணி தலைமையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட தடயவியல் நிபுணர்கள், வெடிகுண்டு நிபுணர்கள் கரைசுத்து புதூருக்கு சென்றனர். அங்கு ஜெயக்குமார் உடல் கிடந்த அவரது தோட்டத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மனைவியின் கல்வி கடனை அடைக்க வெளிநாடு சென்ற வாலிபர்; இன்ஸ்டா காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி - தென்காசியில் பரபரப்பு

ஜெயக்குமாருக்கு சொந்தமான அந்த தோட்டம் சுமார் 7 ஏக்கர் அளவு கொண்டது. அதில் இதுவரை நெல்லை மாவட்ட போலீசாரும், சிபிசிஐடி போலீசாரும் உடல் கிடந்த இடத்தில் இருந்து ஒரு ஏக்கர் அளவிலேயே தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில் சிபிசிஐடி போலீசாருக்கு புதிதாக எந்த தடயங்களும் சிக்கவில்லை. இதனால் சோதனை பரப்பை தோட்டம் முழுவதும் விரிவு படுத்தியுள்ளனர். 

சொத்து தகராறு; தந்தையின் உடலுக்கு அனுமதி மறுத்து கதவை பூட்டி சென்ற இளைய மகன் - மயிலாடுதுறையில் பரபரப்பு

இதற்காக கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தும் சிபிசிஐடி அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் வரவழைக்கப்பட்டு இன்று காலை முதல் ஜெயக்குமாரின் தோட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஏதேனும் முக்கிய தடயங்கள் சிக்குகிறதா? என்பதை ஆய்வு செய்ய தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.