சிவகங்கையில் 40 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டு டிக்-டாக் வீடியோ மூலம் அறிமுகமான தோழியுடன் புதுமணப்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கையில் 40 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டு டிக்-டாக் வீடியோ மூலம் அறிமுகமான தோழியுடன் புதுமணப்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய லியோ. இவருக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் ஆனது. திருமணம் ஆன 45 நாட்களுக்குப் பிறகு மனைவி வினிதாவை சொந்த ஊரில் விட்டுவிட்டு வேலைக்காக சிங்கப்பூர் சென்று விட்டார். அதன் பின்பு வீட்டில் இருந்த நேரத்தில் பொழுதுபோக்கிற்காக டிக்-டாக் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார் வினிதா. அப்போது வினிதாவுக்கு திருவாரூரை சேர்ந்த அபி என்ற பெண்ணுடன் டிக்-டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் தொடர்ச்சியாக வீடியோக்களை எடுத்து பகிர்ந்துள்ளனர்.

மனைவின் இந்த டிக்-டாக் வீடியோக்களைப் பார்த்து அதிர்ந்துபோன லியோ, தன் மனைவியிடம் இனி இதுபோன்ற வீடியோக்களை எடுக்கக்கூடாது என எச்சரித்துள்ளார். ஆனாலும் வினிதா கண்டுக்கொள்ளாமல் தனது போக்கிலேயே வீடியோக்களை வெளியிட்டு அபியுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். மேலும், அபியின் படத்தை டாட்டூவாக தனது கையில் வினிதா வரைந்துள்ளார். மேலும் கையில் டாட்டூவுடன் வீடியோ எடுத்து அதனையும் பகிர்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்து கொண்டார்.

உடனே மனைவிக்கு கூட சொல்லாமல் சிங்கப்பூரில் இருந்து கிளம்பி ஊருக்கு வந்தார். அப்போது, கணவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. திருமணத்தின் போது அணிந்து இருந்த நகைகள் அவர் அனுப்பிய பணம் எதுவும் வினிதாவிடம் இல்லை. இதனையடுத்து, அவரது தாய் வீட்டுக்கு அழைத்து சென்ற கணவர் உங்கள் மகளிடம் டிக்-டாக் பதிவு செய்ய கூடாது என்று சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறார். நீங்கள் திருமணம் செய்த போது போட்ட நகைகள் நான் அனுப்பிய பணம் எதுவும் அவரிடம் இல்லை நீங்களே விசாரியுங்கள் என்று வினிதாவின் தாயாரிடம் கூறிவிட்டு கணவர் வெளியில் சென்றுள்ளார்.

இதனையடுத்து பெற்றோர் வீட்டில் இருந்த வினிதா, அடுத்த இரண்டு நாட்களில் காணாமல் போனதாக குடும்பத்தினர் லியோவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் வினிதாவின் அக்கா நகைகள் 25 சவரனைக் காணவில்லை. இது தொடர்பாக காவல் நிலையத்தில் கணவர் புகார் அளித்துள்ளார். கட்டிய கணவனை விட்டு விட்டு டிக் டாக்கில் பழக்கமான உயிர்தோழியுடன் பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.