சத்தயமங்கலம் அருகே தோட்டப் பணியில் ஈடுபட்டிருந்த மூதாட்டியை திடீரென காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், நெய்தாளபுரம் கிராமத்தில், இன்று காலை 8.30 மணி அளவில், வனப்பகுதியில் இருந்து வெளியேறி, கிராமத்தை ஒட்டிய விவசாய நிலங்களில் காட்டு யானை ஒன்று புகுந்து அங்குமிங்கும் நடமாடியபடி சுற்றித்திரிந்தது. அப்போது எதிர்பாராத விதமாக தோட்டத்தில் நின்று கொண்டிருந்த காளியம்மா (வயது 70) என்ற மூதாட்டியை காட்டு யானை தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே காளியம்மா பரிதாபமாக உயிரிழந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சிவகங்கையில் கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா; மழை வேண்டி வினோத வழிபாடு

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, தாளவாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நெய்தாளபுரம் கிராமத்தில் பட்டப்பகலில் காட்டு யானை தாக்கி மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவமனையில் குவிந்த விவசாயிகள், மாவட்ட அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி தங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனவும் மேற்கொண்டு கிராமத்திற்குள் யானை வராமல் இருக்க தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், அதுவரை நாங்கள் பிரேதத்தை வாங்க மாட்டோம் எனவும் கூறியுள்ளனர். 

முருகனின் காலடியில் வேட்பு மனுவை வைத்து சிறப்பு வழிபாடு நடத்திய அமைச்சர் ரோஜா

கடந்த இரண்டு மாதத்தில் இதேபோல காட்டு யானை தாக்கி முதியனூரை சேர்ந்த ராமு மற்றும் திகினாரை கிராமத்தைச் சேர்ந்த மாக்கையா ஆகிய இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்பொழுது யானை தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.