விருத்தாச்சலம் அருகே கார் மீது மீன் ஏற்றிச் சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். 

விருத்தாச்சலம் அருகே கார் மீது மீன் ஏற்றிச் சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த நைனார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வேலுசாமி மற்றும் அவரது உறவினர்கள் குடும்பத்தோடு, குழந்தைக்கு மொட்டையடித்து காதணி விழா நடத்த விருத்தாச்சலம் மணவாளநல்லூரில் உள்ள கொளஞ்சியப்பர் கோயிலுக்குக் காரில் சென்றுள்ளனர். அப்போது, எதிர்திசையில் அதிவேகமாக வந்த மீன் லாரி கார் மீது வேகமாக மோதியதில், கார் அப்பளம் நொறுங்கியது.

இதில், காரில் பயணித்த வேலுச்சாமி மனைவி ரேவதி, அவருடைய மகள்கள் பவானி, பரிமளா, மற்றும் மீன் ஏற்றிச் சென்ற லாரியின் கிளீனர் லோகநாதன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த தேவானந்த், அறிவரசன், பிரத்விசாய், ரேணுகாதேவி, மணிமேகலை ஆகியோர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் தேவானந்த் என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், இறந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியையும், காரையும் கிரேன் உதவியோடு அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்தால் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.