சென்னை வியாசர்பாடியில் தனியார் உணவகத்தில் சிக்கன் பிரியாணி வாங்கி சாப்பிட்ட ரஞ்சித்(22)  திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை வியாசர்பாடியில் தனியார் உணவகத்தில் சிக்கன் பிரியாணி வாங்கி சாப்பிட்ட ரஞ்சித்(22) திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை வியாசர்பாடி ரத்தினம் தெரு பகுதியை சேர்ந்த குறும்பட இயக்குனர் ரஞ்சித். ஒரு சில குறும்படங்களை இயக்கியுள்ள இவர் பட வாய்ப்புக்காக காத்திருந்து வருகிறார். இந்நிலையில், வியாசர்பாடியில் மதுபோதையில் ரஞ்சித் சிக்கன் பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து, வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் மூச்சு பேச்சு இல்லாமல் ரஞ்சித் திடீரென மயங்கினார். 

இதனையடுத்து, அலறியடித்துக்கொண்டு குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரஞ்சித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

இதனிடையே, பிரியாணி சாப்பிட்டதாலே ரஞ்சித் உயிரிழந்ததாக உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே உயிரிழப்பிற்கான காரணம் தெரிய வரும் என கூறப்படுகிறது. ஏற்கனவே ஆரணியில் சிக்கன் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.